கடன்:

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டிரிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் வைத்துத் திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைக் கேட்டுவிட்டார்கள்.

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கி, ‘கஅப்!’ என்று அழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “இதை (இந்த அளவை) உமது கடனிலிருந்து தள்ளுபடி செய்க!” என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக்கொள்ளும் படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள்.
“அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன், பிறகு நபி(ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) “எழுந்து சென்று பாதிக் கடனை அடைப்பீராக!” என்று சொன்னார்கள்.
புஹாரி பாகம் 1;பாடம்:(71)தொழுகை; ஹதீஸ்:457

Post a Comment

0 Comments