தமத்துஉ முறை (ஹஜ் செய்யும் முறை)


இது (தமத்துஉ முறை) யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் இல்லையோ அவருக்கே (பொருந்தும்)
அல்குரான் : 2:196

இக்ரிமா(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ ஹஜ் பற்றிக் கேட்கப்பட்டது அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
விடைபெறும் ஹஜ்ஜின் போது, முஹாஜிர்களும் அன்சாரிகளும் நபி(ஸல்) அவர்களின் துனைவியரும் (ஹஜ்ஜுக்காக) இஹ்ராம் கட்டினார்கள், நாங்களும் (அதற்காகவே) இஹ்ராம் கட்டினோம். ஆனால் நாங்கள் மக்கா நகருக்கு வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குர்பானி பிரானியை கொண்டு வந்தவர்களை தவிர மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளுங்கள்” என்றார்கள். நாங்களும் காஆபாவை தவாஃப் செய்து, ஸஃபா மருவா இடையே தொங்கோட்டம் ஓடி, மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டு (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்துகொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள். “தம்மோடு குர்பானி பிரானி கொண்டுவந்தவர்கள், பிரானி தனக்குரிய இடத்தை அடையும்வரை (குர்பானி கொடுக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” எனக் கட்டளையிட்டார்கள்.
பிறகு எட்டாம் நாள் மாலையில் நாங்கள் ஹஜ்ஜிக்காக இஹ்ராம் கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நாங்கள் ஹஜ்ஜுக்கான மற்ற கிரியைகளை முடித்துவிட்டு வந்து தவாஃப் செய்தோம். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடினோம். அத்துடன் எங்களது ஹஜ் நிறைவுபெற்றுவிட்டது.

ஆனால், நாங்கள் குர்பானி கொடுக்க வேண்டியிருந்தது. “யார் ஹஜ்ஜையும் உம்ராவையும் “தமத்துஉ” முறையில் நிறைவேற்றுகிறாரோ அவர் (தமக்கு) வசதிப்பட்ட பலிப் பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்கப்பெறாதவர் ஹஜ்ஜின் போது மூன்று நாட்களும் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். (2:196) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.

அதாவது உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும், குர்பானி கொடுப்பதற்கு ஆடு போதும்.
எனவே மக்கள் ஹஜ், உம்ரா என்ற இரு கடமைகளையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றினர். (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சட்டம் அல்லாஹ் தன் வேதத்தில் அருளியதும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையும், மக்கா வாசிகள் அல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததும் ஆகும். ஏனெனில் அல்லாஹ்,  “இது யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் இல்லையோ அவருக்கே (பொருந்தும்)” (2:196) என்று கூறுகின்றான்.

மேலும், அல்லாஹ் (2:197 ஆவது வசனத்தில்) குறிப்பிடும் ஹஜ்ஜின் மாதங்கள் ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜா ஆகியனவாகும். இம்மாதங்களில் யார் “தமத்துஉ” செய்கிறாரோ அவர்மீது பலியிடல், அல்லது நோன்பு கடமையாகும்.

(அந்த வசனத்தின் (2:197) மூலத்தில் இடம்பெறும்) ‘அர்ரஃபஸ்’ என்பது தாம்பத்திய உறவையும், ‘அல்ஃபுசூக்’  என்பது பாவங்களையும், ‘அல்ஜிதால்’ என்பது தர்க்கம் புரிவதையும் குறிக்கும்.


-புஹாரி பாகம்1; பாடம்:ஹஜ்(37); ஹதீஸ்: 1572

ஹஜ் பற்றிய விளக்கம்: (Video)

Post a Comment

0 Comments