இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உ(க்)காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள்.(இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே திரையிடப்பட்டு (அவற்றை அவர்கள் கேட்க முடியாமல் தடுக்கப்பட்டு) விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர்.
அப்போது அக்கூட்டத்தார், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர்.
ஷைத்தான்கள், “வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்கும் இடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்கள் மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன” என்று பதிலளித்தனர்

அவ்வாறே திஹாமா நோக்கிச் சென்ற அந்த ஷைத்தான்கள் (எல்லாத் திசைகளையும் ஆராய்ந்தபடி) நபி(ஸல்) அவர்கள் ‘நக்ஸா’ எனும் இடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையை தொழவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குரான் வசங்களை அந்த ஷைத்தான்கள் கவனமாக செவி கொடுத்துக் கேட்டனர்.
அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்), அல்லாஹ்வின் மீதானையாக! வான் செய்திகளை (கேட்க முடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, “எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குரானை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே, அதை நாங்கள் நம்புகிறோம் (இனி) ஒரு போதும் நம் இறைவனுக்கு நாங்கள் யாரையும் இணையாக கருதமாட்டோம்” என்று கூறினர்.
(இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு, “நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டது...” என தொடங்கும் இந்த (72 ஆவது) அத்தியாயத்தை அருளினான்.
புஹாரி பாகம்1; பாடம்:105(தொழுகை அறிவிப்பு; ஹதீஸ்:773

0 Comments