பெருநாளன்று இமாம் பெண்களுக்கு அறிவுரை கூறல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி) , உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டுள்ளேன். அவர்கள் அனைவரும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர். அதன் பிறகே அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.
(உரை முடிந்தபின்) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து நகர்ந்து, (மக்களைத்) தமது கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பதைப் போன்று உள்ளது. பிறகு ஆண்(கள் அமர்ந்திருந்த வரிசை)களை பிளந்து கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அப்போது “நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாச பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின்..” எனத் தொடங்கும் (60:12ஆவது இறைவசனத்தை முழுமையாக ஓதி முடித்துவிட்டு, “இந்த உறுதிமொழியில் நீங்கள் (நிலையாக) இருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.



ஒரேயொரு பெண்மணி மட்டும், “ஆம் (இருக்கிறோம்)” என்றார்கள். அவரைத் தவிர வேறெவரும் நபி(ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. - அந்தப் பெண்மணி யாரென்று (இதன் அறிவிப்பார்களில் ஒருவரான) ஹசன் பின் முஸ்லிம்(ரஹ்) அவர்களுக்கு தெரியவில்லை- அப்பெண்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் தர்மம் செய்யுங்கள்” என்று சென்னார்கள்.

பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்தியபடி “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், வாருங்கள்!” என்று கூறினார்க்கள். அப்பெண்கள் மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலாயினர்.

-புஹாரி பாகம்1; பாடம்::19(இரு பெருநாள்); ஹதீஸ்:979


** இங்கு “மெட்டிகள்” என்பதைக் குறிக்க ‘அல்ஃபத்க்’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. ஸஅலப்(ரஹ்) போன்றோர் இச்சொல்லுக்கு இவ்வாறே பெருள் செய்துள்ளனர். ஆனால், அப்துர் ரஸ்ஸாக்(ரஹ்) அவர்கள், அறியாமைக் காலத்தில் இருந்த பெரிய மோதிரங்கள் என்று இங்கு விளக்கம் அளிக்கிறார்கள்,
(ஃபத்ஹுல் பாரீ) 

Post a Comment

0 Comments